December 26, 2006

தமிழகத்தின் அயோத்தி தொக்காலிக்காடு!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இருக்கிறது தொக்காலிக்காடு என்ற சின்னஞ்சிறு கிராமம். அதிராம்பட்டினத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காவிரியின் கடைமடைப் பகுதியான இந்தக் கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. 100 சதவீதம் ஹிந்துக்கள் வசிக்கும் தொக்காலிக்காடு கிராம மக்கள், முஸ்லிம்களால் கடந்த 7 ஆண்டுக்காலமாக அனுபவித்து வரும் பலவிதக் கொடுமைகளைக் கேட்டால் கலங்காத கண்ணும் கலங்கும். கல் நெஞ்சும் கரைந்துவிடும்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியின் துணைத்தலைவராக இருப்பவர் எம்.எம்.எஸ். அப்துல் வஹாப். இவர் தொக்காலிக்காடு கிராம எல்லையில் ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலுக்கு அருகில் சர்வே எண் 153.1 ல் உள்ள 6.96 ஏக்கர் நிலத்தை 1977ல் இருந்து படிப்படியாக ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். அப்துல் வஹாப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த 6.96 ஏக்கர் நிலத்தில்தான் தொக்காலிக்காடு சுடுகாட்டிற்கு சொந்தமான பெத்தான் குளம் இருந்தது. அரிஜனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவானது இந்த சுடுகாடு. பிணத்தைத் தகனம் செய்துவிட்டு பெத்தான் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவதுதான் தொக்காலிக்காடு கிராம மக்களின் வழக்கம்.
இப்போது அந்த பெத்தான் குளம் தென்னந்தோப்புகளாகவும், மிகப்பெரிய மாட மாளிகைகளாகவும் மாறியுள்ளது. தொக்காலிக்காடு ஊராட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்த 6.96 ஏக்கர் நிலத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்த அப்துல் வஹாப்பிற்கு தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்த ஷ்ரீ முனீஸ்வரர் கோயில் உறுத்தியது. ஒதிய மரத்தடியில் ஒரு சூலாயுதத்துடன் கட்டிடம் ஏதும் இல்லாதிருந்த முனீஸ்வரர் கோயிலை 5-5-1999 அன்று இரவோடு இரவாக அப்புறப்படுத்தினார் அப்துல் வஹாப்.
மறுநாள் கோயில் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்த்த தொக்காலிக்காடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முனீஸ்வரராய் தாங்கள் வழிபட்ட ஒதிய மரம் வேரோடு வெட்டி வீசப்பட்டிருந்ததைப் பார்த்த அவர்களின் மனம் கொதித்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், தி.மு.கவின் மாவட்டப் பிரதிநிதியுமான பி.ஜெயபால் தலைமையில் இதுபற்றி ஆலோசனை செய்தனர். 6-5-1999 அன்று ஷ்ரீமுனீஸ்வரர் கோயிலை அப்புறப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கோயிலைக் கட்டக் கோரியும் போலீசில் புகார் செய்தனர்.


அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த டாக்டர் ஜெயந்த் முரளி, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அமைத்தார். அதிகாரிகள் மத்தியில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. கோயிலைப் பெரிதாகக் கட்டக் கூடாது, முன்பிருந்த மாதிரிதான் இருக்க வேண்டும், திருவிழாக்களை விமர்சையாகக் கொண்டாடக் கூடாது, அதிக எண்ணிக்கையில் கிடா வெட்டக் கூடாது என்று முஸ்லிம்கள் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதித்தனர். எங்கே கோயில் நம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் கோயிலை முன்பிருந்தபடியே பராமரிக்கிறோம் என்று தொக்காலிக்காடு கிராம மக்கள் உறுதியளித்தனர். அதன்படியே ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலைக் கட்டி, சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து வழிபட்டு வந்தனர்.
கோயில் இருந்தால், தாங்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கு என்றாவது ஒருநாள் ஆபத்து வரும் என்று நினைத்த முஸ்லிம்கள், ஒவ்வொரு வருடமும் திருவிழா நேரத்தில் பிரச்சினை செய்தனர். பணபலத்தால் அதிகார வர்க்கத்தை விலைபேசிவிட்ட ஆக்கிரப்பாளர்கள் போலீசை ஏவிவிட்டனர். ஒருமுறை நள்ளிரவில் தொக்காலிக்காடு கிராமத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான போலீசார் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் அடித்துத் துவைத்தனர். அடித்துத் துன்புறுத்தி 50க்கும் மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தினார்கள்.
தொக்காலிக்காடு கிராமத்தில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2000ம் ஆண்டில் அங்கு வருகை தந்தார். நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் முனீஸ்வரர் கோயிலில் தினமும் நான்கு பேர் உண்ணாவிரதம் இருங்கள் என்று ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று மறுநாளே பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபாலின் மனைவியும், தொக்காலிக்காடு ஊராட்சித் தலைவருமான திருமதி செல்வராணி ஜெயபால் தலைமையில் நான்கு பெண்கள் உண்ணாவிரதம் இருக்கச் சென்றனர். அவர்களைக் கைது செய்ய 500 போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வண்டிகளுடனும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும் வாகனங்களுடனும் காத்திருந்தனர்.


போலீசார் செல்வராணி உள்ளிட்ட நான்கு பெண்களையும் கைது செய்தனர். 28 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகே அவர்கள் வெளியே வரமுடிந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 போலீசார் காத்திருந்து ஏதோ மும்பை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை கைது செய்வதுபோல் அகிம்சை வழியில் ஆக்கிரமிப்பை அகற்றப் போராடியவர்களைக் கைது செய்தனர்.
தொக்காலிக்காடு ஊராட்சித் தலைவரான செல்வராணி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின்கீழ் அப்துல் வஹாப் ஆக்கிரமித்துள்ள பெத்தான் குளத்தை 12-12-2005அன்று மீட்கப் போவதாக அறிவித்தார். இதற்காக அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்களுடனும், கிராம மக்களுடனும் அங்கு சென்ற அவர், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு இது பஞ்சாயத்திற்குச் சொந்தமான மரம் என்பதற்கு அடையாளமாக எண்களைக் குறித்தார். அப்துல் வஹாப் தூண்டுதலால் அங்கு குவிந்திருந்த போலீசார் தனது கடமையைச் செய்த பஞ்சாயத்துத் தலைவர் செல்வராணியைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை முயற்சி(307) உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மறுநாள் செல்வராணியின் கணவர் ஜெயபாலையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். கணவனும் மனைவியும் 350 கி.மீ. இடைவெளியில் இரு நகரங்களில் 45 நாட்கள் சிறைபட்டுக் கிடக்க, அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் பொங்கல் திருநாளைக்கூட அப்பா அம்மாவுடன் கொண்டாட முடியாமல் அனாதைகள்போல தவித்தனர்.
செல்வராணி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறையின் வார்டனாக இருந்த ஒரு முஸ்லிம் பெண், `முஸ்லிம்களையா எதிர்க்கிறாய்?' என்று தினமும் வார்த்தைகளால் அவரை இம்சித்திருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராவதற்காக அரசு வேலையை ராஜினாமா செய்த செல்வராணி, சிறையில் கழிவறையை சுத்தம் செய்யும் கொடுமையையும் அனுபவித்துள்ளார்.

தங்கள் பஞ்சாயத்திற்குச் சொந்தமான நிலத்தை மீட்பதற்காக செல்வராணியோடு தொக்காலிக்காடு ஊராட்சி உறுப்பினர் புஷ்பவள்ளியும் 45 நாட்கள் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கடைசியில் திருச்சியில் தினமும் தங்கி கையெழுத்துப் போடவேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அவர்கள் ஜாமீனில் வர முடிந்தது.
பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், அதிகாரத்தை வளைத்து முஸ்லிம்கள் நடத்தும் எல்லையில்லா அட்டூழியங்களை தொக்காலிக்காடு கிராம மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலையும், 6.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்டே தீருவேன் என்கிறார் இந்த வீரப்பெண்மணி. திருமதி செல்வராணியைப் போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் முனீஸ்வரர் கோயிலை மட்டுமல்ல, அயோத்தியில் ராமர் கோயிலையும் கட்டிவிடலாம்.
(குறிப்பு: பத்தடி இரும்பு வேலியாக உள்ள முனீஸ்வரர் கோயிலை ஹிந்துக்கள் விரிவுபடுத்தி, கட்டாமல் தடுப்பதற்காக 1999லிருந்து 7 ஆண்டுகளாக 24 மணிநேரமும் அந்த இடத்தை போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.ஆனால் கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லிம்கள் கட்டிவரும் பங்களாக்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.)

No comments: