June 22, 2007

இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய வீர மங்கைகள்!

மேலே உள்ள இரண்டு புகைப்படங்களையும் உற்றுப்பாருங்கள். முதல் படத்தில் இருப்பவர்கள்தான் இரண்டாவது படத்திலும் இருக்கிறார்கள். (ஒரு சிலர் மாறியிருக்கலாம்) முதல் படம் 1977ல் எடுக்கப்பட்டது. அதில் இருப்பவர்கள்
நின்று கொண்டிருப்பவர்கள்(இடமிருந்து வலம்) மோகனா, அயனாவரம்(தந்தை பெயர் கந்தசாமி), கஸ்தூரி, திரு.வி.க நகர்(கணவர் பெயர் பழனி), அமிர்தவள்ளி, சின்ன பரமேஸ்வரி, மாதவரம்( இவர் இப்போது இல்லை), பாரதி, திருவல்லிக்கேணி(கணவர் பெயர் ரங்கராஜன்), சின்ன கல்யாணி, பெரம்பூர்(கணவர் பெயர் சிவக்குமார்), பாரதமாதா பரமேஸ்வரி, பெரம்பூர்(தந்தை பெயர் வேணுகோபால்)
அமர்ந்திருப்பவர்கள் கமலா தேவேந்திரன், ஓட்டேரி(கணவர் பெயர் தேவேந்திரன்), பெரிய கல்யாணி, பெரம்பூர், ஜெயம்மா எத்திராஜ், திரு.வி.க நகர்( இவர் இப்போது இல்லை), சந்திரம்மா கோதண்டபாணி, திரு.வி.க நகர்(இவரும் இப்போது இல்லை) அம்சவள்ளி, ஓட்டேரி(இவரும் மரணமடைந்து விட்டார்)
இரண்டாவது படம் கடந்த 2006 ஜூன் 25ம் தேதி என்னால் எடுக்கப்பட்டது. இதில் முதல் படத்தில் இருக்கும் அமிர்தவள்ளி, பாரதமாதா பரமேஸ்வரி, எஸ்.கல்யாணி,மோகனா, கமலா, இந்திரா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் யார்? இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `இரண்டாவது சுதந்திரப் போர்' என்று வர்ணிக்கப்படும் எமெர்ஜென்ஸிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள். சிறை சென்றபோது இவர்களின் வயது 13 லிருந்து 35க்குள் என்பதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுப்படுத்தும் வகையில் 2006ம் ஆண்டு சென்னையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திராவின் அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற இந்த வீர மங்கைகளும் வந்திருந்தனர். அவர்களுடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடினேன். அவர்களது அனுபவங்களை கேட்க, கேட்க ஏதோ திகில் கதை கேட்பதைப்போல இருந்தது.
13 வயதில் சிறை சென்ற அமிர்தவள்ளி தற்போது சென்னை அமைந்தகரையில் வசிக்கிறார். அவரிடம் அவரது போராட்ட அனுபவங்களை கேட்டேன். அதை அப்படியே கேள்வி - பதில் வடிவில் தருகிறேன்.
சிறை சென்றபோது உங்களுக்கு என்ன வயது?
13
அந்த வயதில் எமெர்ஜென்ஸி என்றால் என்ன என்று தெரியுமா? ஏன் எமெர்ஜென்சியை எதிர்த்து போராடினீர்கள்?
காரணம் தெரியாது. எங்கள் குடும்பம் ஆர்.எஸ்.எஸ் குடும்பம். ஆர்.எஸ்.எஸ்ஸை தடை செய்துவிட்டார்கள். நாம் போராட வேண்டும். அதற்காக ஒரு ரகசிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் பத்மநாபன் எங்களிடம் சொன்னார். அதனால் அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.
அந்த ரகசிய கூட்டத்தில் என்ன நடந்தது?
அந்த கூட்டத்தில் எப்படி போராட வேண்டும், ஒவ்வொருவருக்கும் என்ன வேலை என்பதை பிரித்துக் கொடுத்தார்கள்.
உங்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது?
சென்னை தி.நகரில் இந்திராவின் அடக்குமுறையை எதிர்த்து சத்தியாகிரகம் அதாவது ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். அதன்படி தி.நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். "இந்திராவின் சர்வாதிகாரம் ஒழிக!", "ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கு", "வந்தே மாதரம்'` போன்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டே நாங்கள் சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டீர்கள்?
15க்கும் அதிகமான பெண்கள் இருந்தோம். அவர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை.
எப்போது கைதானீர்கள்?
தி.நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தும்போதே போலீசார் எங்களை பிடித்து விட்டனர். ஆனால் நாங்கள் சிறுமிகளாக இருந்ததால் எங்களை எச்சரித்து விட்டுவிட்டார்கள். அடுத்த வாரம் நாங்கள் அயனாவரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்துவிட்டார்கள்.
எத்தனை நாள் சிறையில் இருந்தீர்கள்?
90 நாட்கள்
சிறையில் என்ன செய்தீர்கள்?
சிறையில் பஜனை, யோகா என்று பொழுது கழுந்தது.
சிறை சென்றதற்காக எப்போதாவது வருத்தப்பட்டுள்ளீர்களா?
நிச்சயமாக இல்லை. சிறை சென்றதற்காக பெருமைப்படுகிறேன்.


ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் பத்மநாபனின் வேண்டுகோளை ஏற்று 13 வயது அமிர்தவள்ளி மட்டுமல்ல, அயனாவரத்தைச் சேர்ந்த 13 வயது மோகனாவும் சிறை சென்றுள்ளார். பெரம்பூரைச்சேர்ந்த எஸ்.கல்யாணிக்கு அப்போது வயது 32. ஐந்து குழந்தைகளுக்கு தாயான அவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையை ஏற்று சிறை சென்றிருக்கிறார். இதுபோலவே ஓட்டேரியைச் சேர்ந்த 35 வயது கமலா தேவேந்திரனும் தனது குழந்தைகளை விட்டுவிட்டு சிறை சென்றார். இப்படி பலரின் தியாகம் பிரமிக்க வைத்தது. இவர்கள் அனைவரும் 90 நாட்கள்சிறையில் இருந்திருக்கிறார்கள்.
13 வயதில் சிறை சென்ற மோகனாவிடம் சிறை சென்றதால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று கேட்டேன்.
சிறை சென்ற பெண் என்பதால் எனது திருமணம் தள்ளிக்கொண்டே போனது. திருமணம் நடந்த பிறகு புந்த வீட்டிலும் இதனால் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனாலும் நான் ஒருபோதும் சிறை சென்றதற்காக வருத்தப்பட்டதில்லை என்றார். மோகனா மட்டுமல்ல நான் சந்தித்த எல்லா பெண்களுமே சிறை சென்றதற்காக பெருமிதம் கொள்வதாகவே கூறினார்கள். சங்கத்திற்காவும்( ஆர்.எஸ்.எஸ்) நாட்டிற்காகவும் தானே சிறை சென்றோம். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்றே எல்லோரும் சொன்னார்கள்.
எமர்ஜென்சி என்றதும் இவர்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பெரம்பூர் திரு.வி.க நகரைச் சேர்ந்த திருமதி ஜெயம்மாதான். இவர் தலைமையில்தான் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றதாம். ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லை. சின்ன பரமேஸ்வரி, அம்சவள்ளி என்று தங்களோடு போராடி இறந்து போனவர்களின் நினைவுகளை அவர்கள் சோகத்தோடு நம்மிடம் விவரித்தார்கள்.
எமெர்ஜென்சியின்போது தற்செயலாக ஒருசில நாட்கள் சிறைசெல்ல நேர்ந்தவர்கள்கூட மிசா ராமசாமி, மிசா ராணி என்றெல்லாம் தங்களின் பெயர்களுக்கு முன்னாள் மிசா என்று பட்டம் சூட்டிக்கொண்டு லாபமடைந்தபோது, உண்மையிலேயே இந்திராவின் அடக்குமுறையை எதிர்த்து போராடி வெற்றி கண்ட இந்த வீர மங்கைகளின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டமான ஒன்று.

3 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள புதுவை சரவணன்,

மிக முக்கியமான பதிவை அளித்துள்ளீர்கள். நன்றி.

Anonymous said...

wonder ful information. Yhanks

gps said...

a great site