November 19, 2007

சென்னையில் துறவிகள் மாநாடு!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான சங்கராலயத்தில் தென்பாரத துறவியர்களின் மாநாடு நடைபெற்றது. 17-11-2007 அன்று நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடாகா போன்ற தென்மாநிலங்களில் இருந்து துறவியர்களும், மடாதிபதிகளும் பங்கேற்றனர். ராமர் பாலத்தை இடிக்காமல் காப்பாற்றுவதற்கான போராட்டத்தை வலுப்படுத்த இராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கத்தால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.



பெஜாவர் சுவாமிகள் பேசுகிறார்



நவம்பர் 30 ம் தேதியிலிருந்து ராமர் பாலத்திலிருந்து எடுக்கப்பட்ட மிதக்கும் கல் ரத யாத்திரையாக நாடு முழுவதும் மக்கள் தரிசனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

டிசம்பர் 30ம் தேதி புதுடெல்லி போட் கிளப்பில் 15 லட்சம் ராம பக்தர்கள் பங்கேற்கும் டில்லி சலோ மாநாடு நடத்தப்டும்.

என்ற இரு அறிவிப்புகள் இந்த மாநாட்டிலும் மாநாட்டின் இடையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளியிடப்பட்டன.


ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் சுப்பிரமணிய சுவாமிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம், பொதுச் செயலாளர் டாக்டர் பிரவின்பாய் தொகாடியா, மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன், ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கத்தின் அகிலபாரதத் தலைவர் டாக்டர் எஸ்.கல்யாணராமன், செயலாளர் டி.குப்புராமு, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, சந்திரலேகா, ஆர்.எஸ்.எஸ்ஸின் தென்பாரத அமைப்பாளர் சேதுமாதவன், தினமலர் உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், உடுப்பி பெஜாவர் சுவாமிகள், ஹரித்வார் ஹம்ஸ்தாஸ் சுவாமிகள், பேரூர் இளைய பட்டம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், ஷ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம் சாக்தஷ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சதுர்வேதி சுவாமிகள், காஞ்சி ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஷ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், சிரவை ஆதினம் ஷ்ரீமத் குமரகுருபர சுவாமிகளுடன் உரையாடும் காட்சி



மாநாட்டில் பிரவின்பாய் தொகாடியா பேசுகிறார்


இந்த மாநாடு முதல் தளத்தில் நடந்து கொண்டிருக்கும்போது இரண்டாவது தளத்தில் பிரஸ் மீட் நடந்தது. இதில் வேதாந்தம், எஸ்.கல்யாணராமன், பிரவின் பாய் தொகாடியா, மருதாச்சல அடிகளார், ஹரித்வார் ஹம்ஸ்தாஸ் சுவாமிகள், உடுப்பி பெஜாவர் சுவாமிகள், ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் ஆகியோர் செய்தியாளர்களிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். உடுப்பி பெஜாவர் சுவாமிகள், ஹரித்வார் ஹம்ஸ்தாஸ் சுவாமிகள் ஆகியோரின் இந்தி பேச்சை பிரவின் பாய் தொகாடியா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார். பிரஸ் மீட்டில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்த மருதாச்சல அடிகளாரும் ஆங்கிலத்தில் பேசினார். அவரிடம் தொகாடியா தமிழில் பேசும்மாறு கேட்டுக் கொண்டார்.
எல்லோரும் பேசி முடித்ததும் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று தொகாடியா கேட்டார்.


சேது சமுத்திர திட்டத்திற்கும் அதன் இப்போதைய வழித்தடத்திற்கும் பா.ஜ.க அரசு தானே அனுமதி அளித்தது. அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்?

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும் என்று அரசு கூறிகிறதே?

என்று வழக்கமாக கேட்கும் கேள்விகளையே கேட்டார்கள். ஒரு பெண் நிருபர் மட்டும் தமிழகத்தில் நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவில்லையே என்று பொருள்படும்படியாக ஒரு கேள்வியை சுற்றி வளைத்து கேட்டார். (இதே பெண் நிருபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்த பிரஸ் மீட்டிலும் இதே கேள்வியை கேட்டார்)

பிரஸ் மீட்



ராமர் பாலத்தில் உள்ள மிதக்கும் கல்


ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒரு கல் செய்தியாளர் சந்திப்பில் மிதக்க வைத்து காண்பித்தார்கள். மாநாடு மாலை வரை நடைபெற்றது.

1 comment:

அரவிந்தன் நீலகண்டன் said...

பொதுவாக எரிமலைக்குழம்புகளிலிருந்து உருவான சிலவித கற்கள் மிதக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும். இவற்றின் density நீரின் densityயைவிட குறைவு என்பதால். வால்மீகி இராமாயணத்திலும் மிதக்கும் கற்கள் குறித்து கூறப்படவில்லை. ஆனால் மிதக்கும் கற்கள்- அதில் ராமநாமம் எழுதப்பட்டது போன்ற அழகான கற்பனைகள் நம் தேசிய இதிகாசமான இராமாயணத்தை எந்த அளவுக்கு ஒவ்வொரு இயற்கை நிகழ்வுடனும் நம் மக்கள் காலம்காலமாக இணைத்து போற்றியுள்ளனர் என்பதனை மீள்-நிரூபிக்கிறது.