June 15, 2007

சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!


சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் போதெல்லாம் பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து வியந்த செஞ்சிக் கோட்டையை நேரில் கண்டபோது எங்கள் கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.
செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின் கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள். நாங்கள் காலை 8.30க்கே சென்றுவிட்டதால் அரைமணிநேர காத்திருப்புக்குப் பிறகே கோட்டைக்குள் நுழைய முடிந்தது.
நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், சிவன் கோயிலும் நம்மை வரவேற்கின்றன. இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் சேதப்படுத்தப் பட்டிருக்கின்றன. இருந்தாலும் அதன் அழகு, இந்தச் சிற்பங்கள் சேதப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மை ஏங்க வைக்கிறது.
தொடர்ந்து நாம் பிரமிப்புடன் நடந்து செல்லும்போது வேலூர் வாயிலும், சாதத்துல்லாகான் மசூதியும் வருகிறது. (இந்த சாதத்துல்லாகான் மசூதி தொல்பொருள் ஆய்வுத்துறையால் வர்ணம் பூசப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.) செஞ்சிக் கோட்டையானது ராஜகிரி கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை, சந்திரகிரி கோட்டை, மேற்குமலைக் கோட்டை என்று பல பிரிவுகளாக உள்ளது. நுழைவுக்
கட்டணம் செலுத்தி ராஜகிரி
கோட்டைக்குள் நுழையும்முன், அதன் வரலாற்றை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ராஜகிரி கோட்டைக்குள் உள்ள செஞ்சியம்மன் கோயிலின் பெயரிலேயே செஞ்சி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
செஞ்சி கி.மு. 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் வசம் இருந்திருக்கிறது. செஞ்சிக்கு அருகே உள்ள சிறுகடம்பூரில் செதுக்கப்பட்டுள்ள 24 சமணத் தீர்த்தங்கர்களின் உருவங்களையும், கிருஷ்ணகிரி மலையில் செதுக்
கப் பட்டுள்ள சமண படுக்கைகளையும் இதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை செஞ்சியை பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரம் மற்றும் மேலைச்சேரியில் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்களும், பணமலை என்ற ஊரில் குன்றின்மேல் உள்ள கோயிலும் இதனை உறுதி செய்கின்றன.
பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், கோனார் பரம்பரையினர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், முஸ்லிம்கள், சத்ரபதி சிவாஜி, மொகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் என எல்லோரும் செஞ்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
இப்போதுள்ள ராஜகிரி கோட்டையை கி.பி. 13-ம் நூற்றாண்டில் கோனார் பரம்பரையில் வந்த ஆனந்தகோனார் என்பவர் கட்டியதாகவும், அவரது மகன் கிருஷ்ணகிரி கோட்டையைக் கட்டியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கி.பி. 14-ம் நூற்றாண்டிலிருந்து 150 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள், செஞ்சிக் கோட்டையை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில்தான் மிக நீண்ட வலிமைமிக்க சுவர்களுடன் கூடிய கோட்டைகளும், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய கோயில்களும் கட்டப்பட்டன.
பாரத வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி கி.பி. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம் களிடமிருந்து செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி தனது உறவினரிடம் ஒப்படைத்தார். பிறகு செஞ்சியின் அரசாட்சி சிவாஜியின் மற்றொரு உறவினரான ராஜாராம் என்பவரிடம் வந்தடைந்தது. இதற்குப் பிறகு கி.பி. 1700-ல் மொகலாய தளபதி ஜூல்பீர்கான் செஞ்சிக் கோட்டையை மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றினார். செஞ்சிக் கோட்டையின் கதாநாயகன் ராஜா தேசிங்கின் தந்தை சொரூப்சிங்கிடம் ஆட்சியை ஒப்படைத்தவர் இவர்தான். சொரூப் சிங்கின் மறைவிற்குப் பிறகு ராஜா தேசிங்கு செஞ்சிக் கோட்டையின் ராஜாவாக முடிசூடிக்கொண்டார்.
செஞ்சிக் கோட்டையில் ஹிந்து மன்னர்கள் கட்டிய கோயில்களையும், சிற்பங்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி இருக்கிறார்கள். முஸ்லிம்களால் சேதப்படுத்தப்பட்டு சிதிலமடைந்துள்ள கோயில்களையும், சிற்பங்களையும் நாம் இன்றும் காணமுடிகிறது.
ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ராஜகிரி கோட்டைக்குள் நுழைந்தால் அதன் தரைதளத்திலும் மலையின்மீதும் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. தரை தளத்திலுள்ள கல்யாண மஹால் தூரத்திலிருந்து பார்க்கும்போதே, பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கிறது. உச்சியில் பிரமிடு வடிவத்துடன் எட்டு அடுக்குகளைக் கொண்ட இந்த மஹாலில் நீச்சல் குளமும் பெண்கள் தங்குவதற்கென தனி அறைகளும் உள்ளன. இந்த மஹாலில் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் 3 சதுரமீட்டர் பரப்பளவுடனும், வளைவான சாளரங்களுடனும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் அறையின் இருபுறங்களில் இறங்குவதற்கும், மேல் அடுக்கிலுள்ள அறைகளுக்குச் செல்வதற்கும் தனித்தனி வழிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அறைகளின் சுவர்களின் உட்பகுதியில் சுடுமண் குழாய்களைப் பொருத்தி அவற்றின் மூலம் நீர் ஊற்றுகள் வருமாறு இந்த கல்யாண மஹால் கட்டப்பட்டுள்ளது.
தரைதளத்திலுள்ள தானியக் களஞ்சியம், வெடிமருந்து கிடங்கு, வேணுகோபால சுவாமி கோயில், சப்த கன்னியர்கள் கோயில், ராஜா தேசிங்கு தகனம் செய்யப்பட்ட இடம், சர்க்கரைக் குளம், செட்டிக் குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக் கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். செங்குத்தான படிக்கட்டுகளின் வழியே ராஜகிரி கோட்டை யின் மேலே ஏறினால் ஆனந்த கோனாரும், நாயக்க மன்னர்களும் கட்டிய கோட்டைகளும், ரங்கநாதர், கமலக்கன்னியம்மன் போன்ற கோயில்களும் நமக்காகக் காத்திருக்கின்றன. மேலே ஏறஏற மலையேற்றம் கடினமாக இருக்கும்படியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இழுவைப் பாலத்தின் மூலம் ராஜகிரி கோட்டையின் உச்சிக்குச் சென்றால் அங்கும் நமக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. மணிக்கூண்டு (இந்த மணிக்கூண்டிலிருந்த வெண்கல மணி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின்போது பாண்டிச்சேரிக்குக் கடத்தப்பட்டது), பீரங்கி, பால ரங்கநாதர் கோயில், தானியக் களஞ்சியம் மற்றும் நீர் வற்றாத சுனைகளும் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
ராஜகிரி கோட்டையின் உச்சியில் இருந்து கிருஷ்ணகிரி கோட்டை, சந்திரகிரி கோட்டை, மேற்கு மலைக் கோட்டை மற்றும் கோட்டை இல்லாத மலைத்தொடர்களின் அழகை ரசிக்க, கண்கள் கோடி வேண்டும். ராஜகிரி கோட்டையில் இருந்து இறங்கி பாண்டிச்சேரி வாயிலின் வழியாக வேங்கடரமணர் ஆலயத்தையும், சுழலும் பீரங்கி மேடையையும் தரிசித்து விட்டு நாங்கள் ராணி கோட்டை என்றழைக் கப்படும் கிருஷ்ணகிரி கோட்டைக்குச் சென்றோம். நாள் முழுவதும் மலை யேறிய களைப்பு இருந்தாலும் ராணி கோட்டையிலுள்ள அழகிய கட்டடங்களையும், சிற்பங்களையும் காணும் ஆவல் எங்களின் களைப்பைப் போக்கியது.
ராணி கோட்டையின் படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தாக உள்ளன. இடையிடையே இளைப் பாறுவதற்கு சிறுசிறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. ராணியைப் பல்லக்கில் தூக்கி வரும்போது பல்லக்குத் தூக்கிகள் இளைப்பாறுவதற்காக இந்தச் சிறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சில உள்ளூர்வாசிகள் நம்மிடம் தெரிவித்தனர். எல்லா கோட்டைகளைப் போலவே இங்கும் எண்ணெய் கிணறு, சுழலும் பீரங்கி மேடை, ரங்கநாதர் கோயில், நெற்களஞ்சியம் ஆகியவை உள்ளன. இருந்தாலும் இங்குள்ள கிருஷ்ணர் கோயிலும் தர்பார் மண்டபமும் அதில் உள்ள ஊஞ்சல் மண்டபமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பியபோது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் பயணம் செய்து திரும்பியது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ராஜா தேசிங்கும், ராஜராஜ சோழனும், சத்ரபதி சிவாஜியும் ஆட்சி செய்த செஞ்சிக் கோட்டை, நம் ஹிந்து மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை செஞ்சிக் கோட்டைக்குச் சென்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள்.

1 comment:

Anonymous said...

Saravanan,

Beautiful description. But, it raises many questions.

I know that they remain and will remain unanswered.

For example, what happenned to the silver bell?

when so many beatiful sculptures filled temples are being left uncared, why a fourwalled structure being maintained properly because it is a masjid? etc.