June 11, 2007

பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம்!


அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.
அச்சிறுபாக்கம் கிராமத்து சூழல் மிகவும் அமைதியான கிராமிய மண்ணின் மனத்தோடு, வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது. கிராமத்தினுள் நுழையும்போது ஒரு விநாயகர் கோயிலும், அருகில் பெரிய குளக்கரையும் அதனையடுத்து பஜார் என்று சொல்லப்படும் கடைத்தெருவும் நம்மை வரவேற்கிறது. அதனை அடுத்து ஊருக்குள் நுழைந்தால் ஊரின் மையப்பகுதியில் அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான சிவன் கோயில் அமைந்துள்ளது. அதுதான், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் அர்த்த மண்டபம். அதனை அடுத்து நேராக மூலவர், சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சோழர் காலத்து திருத்தலமாகும்.
அச்சிறுபாக்கம் என்பது பழங்காலத்தில் அச்சு இருபக்கம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது நமது சமய வழக்கப்படி எந்த காரியமானாலும் திருமணம் போன்ற சுப காரியங்களானாலும், தெய்வ காரியங்களானாலும் முழுமுதற் கடவுளான விநாயகரின் திருஉருவத்தை மஞ்சளில் பிடித்து பூஜை செய்த பிறகே ஆரம்பிப்பார்கள். அதனை உணர்த்தும் பாடல்களும் உண்டு, நெடுங்காலத்துக்கு முன்பு கிராமத்து மக்கள் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழாவின் போது விநாயகப் பெருமானை வழிபடாமல் தேர் இழுக்க முற்பட்டபோது தேரின் அச்சுமுறிந்து இருபக்கமும், தேரின் சக்கரங்கள் வீழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதனாலேயே அந்த ஊரின் பெயர் அச்சு இருபக்கம் என்று வழங்கலாயிற்று. `அச்சு இருபக்கம்' என்பதே காலப்போக்கில் அச்சிறுபாக்கம் என்று மாறிற்று என்று கூறப்படுகிறது. அச்சிறுபாக்கம் மலை, கிராமத்தின் வலது புறத்தில் உள்ளது. இம்மலை தரையிலிருந்து சுமார் 700 அடி உயரம் கொண்டது. மலையில் பாறைகளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றால், முதலில் விநாயகரைத் தரிசித்து விட்டு மேலே சென்று பசுபதீஸ்வரரைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் உள்ள கோயிலில் உள்ள சிவாலயம் மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வர வஜ்ரகிரி வடிவேலர் ஆலயம் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகின்றது.
இம்மலை வஜ்ரகிரி என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் தோற்றத்தைப் பார்க்கும்போதே அக்கோயில் பல தாக்குதல்களையும், விஷமச் செயல்களையும் எதிர்கொண்டு நிற்பதை உணர முடியும்.
இக்கோயில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பதை, அதன் அமைப்பே நமக்கு உணர்த்துகிறது. சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முதன்முதலில் கோயில் ஸ்தாபிக்கப்பட்டபோது இருந்த சிவலிங்கம், விஷமிகளின் செயலால் மலைச்சரிவில் புதையுண்டு கிடப்பதை நாம் காணலாம். நெடுங்காலத்துக்குப் பிறகு 1960களில் மௌன சித்தராஜா என்பவர் இத்திருத்தலத்தைப் பராமரித்து வந்திருக்கிறார். கோயிலைப் புனரமைக்கும் முயற்சியில் மீண்டும் சிவலிங்கத்தையும், முருகனின் திருஉருவத்தையும் அமைத்தார். அவர் இருந்த காலத்தில் மக்கள் அங்கு சென்று பிரதோஷ காலங்களிலும், வாரத்தின் முக்கிய பூஜை நாட்களிலும் வழிபட்டு வந்துள்ளனர். மலைகள் சூழ்ந்த அடிவாரத்தில் ஒரு குளத்தை நிர்மாணித்து அதில் இரட்டை சுனைகளை சீரமைத்து கிணறுகள் அமைத்துள்ளார். பல மூலிகைச் செடிகொடிகளை கொண்ட வனாந்திரமான மலையின் பின் அடிவாரத்தில் சப்த கன்னிகளுக்கு கோயில் உள்ளது.
அச்சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான சீதாபுரம், பள்ளிபேட்டை, நேமம் ஆகிய பகுதிமக்களுக்கு பசுபதீஸ்வரர் கோயில் குலதெய்வக் கோயிலாகும். பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

No comments: