மோடி வித்தை!
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில் முதலீட்டளர்கள் உச்சி மாநாட்டில் நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் தொழிலபதிபர்களான ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா போன்றவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு புகழ் மாலை சூட்டினார்கள். அவற்றை இந்தியா டுடே(ஜனவரி 31,2007) வெளியிட்டுள்ளது. மீடியாவால் மதவெறியர், முஸ்லிம்களுக்கு எதிரானவர், சிறுபான்மையினருக்கு எதிரானவர், கொடுங்கோலன் என்று பாராட்டப்ட்ட நரேந்திர மோடிக்கு தொழிலதிபர்கள் வழங்கிய பாராட்டுக்களில் சில....
"தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தரப்படும் உறுதிமொழிகள் விரைவில் மறக்கப்பட்டுவிடும். ஆனால் துடிப்பான குஜராத் வித்தியாசமானது. 2003, 2005ல் நடந்த மாநாடுகளில் உறிதியளிக்கப்பட்ட திட்டங்களில் 80 சதவீதம் பூர்த்தி அடைந்து விட்டன. அல்லது பல்வேறு நிலைகளில் அமலாக்கப்பட்டுவிட்டன"
- இந்தியா டுடே(ஜனவரி 31,2007)
"இன்று குஜராத்தில் இல்லாதவர்கள் மக்குகள். மோடியின் தலைமையின் வசீகரமும், செயல்முறைகளும் எங்கள் அனைவரின் மனதையும் தொட்டது"
- கட்ச் மாவட்டத்தில் முந்த்ராவில் 4,000 மெகாவாட் மின்திட்டம் கொண்டு வருவதாய் அறிவித்த டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா.
"மோடி வியக்கத்தக்க வகையில் தெளிவாக தீர்மானமாக இருக்கிறார். அவர் குஜராத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்"
-குஜராத்திற்கு ரூ 67,000 கோடி முதலீட்டை அறிவித்த முகேஷ் அம்பானி.
"மோடி குஜராத்தின் சி.இ.ஓ"
- தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா
"குஜராத் ஒரு உன்னதமான கதை. அந்தக் கதை நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையைச் சுற்றியே உள்ளது"
- தொழிலதிபர் அனில் அம்பானி
"குஜராத் நல்ல ஆளுகையின் மாதிரி"
-எஃப் ஐசிசி ஐ சேர்மன் கோரக்கிவாலா
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் நரேந்திர மோடிக்கு புகழ் சூடியதோடு நின்று விடவில்லை. துறைமுகங்கள், மின்சாரம், ஜவுளித் துறை, விவசாயம், உயிரி தொழில் நுட்பம், சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் ரூ 4.5 லட்சம் கோடி மதிப்பீட்டிலான முதலீட்டு திட்டங்ளை அறிவித்தார்கள். இதன் மூலம் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.( இதுபோன்ற அறிவிப்புகள் மற்ற மாநிலங்களைப்போல வெறும் அறிவிப்போடு நின்றுவிடுவதில்லை. கடந்த 2003 உச்சி மாநாட்டில் ரூ 65,000 கோடிக்கு 76 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ரூ.22,000 கோடி மதிப்பிலான 29 திட்டங்கள் உற்பத்தியை துவக்கி விட்டன. ரூ 39,000 கோடி மதிப்பிலான 21 திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையில் உள்ளன. 2005 உச்சி மாநாட்டில் ரூ 1.06லட்சம் கோடிக்கு 227 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ரூ. 23,000 மதிப்பிலான 84 திட்டங்கள் உற்பத்தி நிலையிலும், ரூ. 65,000 கோடி மதிப்பிலான 85 திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையிலும் உள்ளன)
வழக்கம் போலவே இதனை மீடியா அதிகமாக கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளால் மட்டுமல்ல ஒட்டுமொத்த மீடியாக்களாலும் அதிகமாக இம்சிக்கப்பட்டவர் நரேந்திர மோடி. அவரைப்போல எதிர்ப்புகளைச் சந்தித்த முதல்வர் ஒருவர் இருக்கவே முடியாது. ஆனால் எல்லா எதிர்புகளையும் மீறி குஜராத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மோடி. மாநில அரசுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு குஜராத்திற்கு எந்த அளவுக்கு தொந்தரவுகள் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்து வருகிறது. முதலீட்டாளர்களை குஜராத்திற்கு செல்ல விடாமல் மத்திய அரசு எவ்வளவுதான் தடுத்தாலும் மோடி அவற்றை தவிடுபொடியாக்கி முதலீட்டாளர்களை குஜராத்தை நோக்கி படையெடுக்க வைத்து விடுகிறார். இன்று இந்தியாவிலேயே குஜராத் முதலிடத்தில் இருப்பதற்கு நரேந்திர மோடி தான் காரணம் என்பதை அவரை எதிர்த்த மீடியாவே ஒத்துக்கொண்டுள்ளது. இது நரேந்திர மோடியின் நிர்வாக திறமைக்கு கிடைத்த வெற்றி.
தூற்றுபவர் தூற்றட்டும். பாராட்டுபவர் பாராட்டட்டும் என்று தனது கடமையில் கண்ணாக இருந்து குஜராத்தை நாட்டின் முதல் மாநிலமாக மாற்றியிருக்கிறார் மோடி. அதனால்தான் மாநில முதல்வர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தொழில்துறை சி.இ.ஓக்களிடம் ஒப்படைத்தால் நரேந்திர மோடி மீண்டும் தேறி விடுவார் என்று எழுதியுள்ளது இந்தியா டுடே. குஜராத்தை எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
கடைசியாக ஒரு செய்தி. நாட்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேர மின்வசதி அளித்துள்ள ஒரே மாநிலம் குஜராத்.