June 15, 2007

தந்தையை மீட்ட தனயன்


செஞ்சிக் கோட்டையை சமணர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும் செஞ்சிக் கோட்டை என்றதும் ராஜா தேசிங்கு என்ற பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது. இத்தனைக்கும் ராஜா தேசிங்கு 18 வயது வரைதான் வாழ்ந்தார். மொகலாய பேரரசின் படைத்தளபதியாக இருந்த ராஜபுத்திர வீரன் சொரூப்சிங் அந்தப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் துணைபுரிந்தார். இதனால் அவர் கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொகலாயர்களின் வசம் இருந்த செஞ்சிப் பகுதியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சொரூப்சிங்கிற்கும் ராமாபாய்க்கும் மகனாகப் பிறந்த தேஜஸ்சிங் தான் ராஜா தேசிங்கு என அழைக்கப்படுகிறார். போர்க் கருவிகளைக் கொண்டு விளையாடுவதும், புலிகளுடன் சண்டையிடுவதும்தான் சிறுவயதில் தேசிங்கின் பொழுதுபோக்காக இருந்தது. டில்லி அரசரிடம் இருந்த நீலவேணி என்ற குதிரையை அடக்கச் சென்ற தேசிங்கின் தந்தை அதை அடக்க முடியாமல் தோல்வியுற்றதால் சிறைப்படுத்தப்பட்டார். இதை தன் தாய் மூலம் கேள்விப்பட்ட 15 வயது சிறுவனான தேசிங்கு, டில்லி சென்று நீலவேணி என்ற குதிரையை அடக்கி தந்தையை சிறையிலிருந்து மீட்டார். யாராலும் அடக்க முடியாத குதிரையை அடக்கியதால் டில்லி அரசர் நீலவேணி குதிரையை தேசிங்கிற்கு பரிசளித்ததோடு, தனது படைத்தலைவன் பீம்சிங்கின் மகளையும் திருமணம் செய்து வைத்தார்.
மகனால் சிறையிலிருந்து மீட்கப்பட்ட சொரூப்சிங் மீண்டும் செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஆட்சியை தொடர்ந்தார். சொரூப்சிங் இறந்ததும் டில்லி அரசருக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்ட ராஜா தேசிங்கு மறுத்ததால் அவர் ராஜாவாக முடிசூட்டிக் கொள்வதை ஆற்காடு நவாப் எதிர்த்தான். ஆனால் இளம் சிங்கமான தேசிங்கு தனது பரம்பரை உரிமையை விட்டுக் கொடுக்காமல் எதிர்ப்புகளைத் தகர்த்தெறிந்துவிட்டு தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார். ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் போர் தர்மத்தை மீறி தொடுத்த ஒரு போரில் நயவஞ்சகமாக தேசிங்கு கொல்லப்பட்டார். அப்போது ராஜா தேசிங்கிற்கு வயது 18தான். ராஜா தேசிங்கின் உடல் செஞ்சியில் ஹிந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. கணவனின் பிரிவைத் தாங்கமுடியாமல் தேசிங்கின் மனைவியும் உயிர் துறந்தாள். தேசிங்குராஜன் மற்றும் அவரது படைத்தளபதி மகம்மதுகானின் சமாதி செஞ்சிக்கு அருகில் உள்ள நீலாம் பூண்டி கிராமத்தில் இன்றும் உள்ளது. இங்கு தேசிங்கின் நீலவேணி குதிரைக்கும் சமாதி கட்டப்பட்டுள்ளது. இப்படி18 வருடங்களே வாழ்ந்த ராஜா தேசிங்கின் வரலாறு, நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ராஜா தேசிங்கின் வீரத்தை நினைவு கூரும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்றும் செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பாடப்பட்டு வருகிறது. ஹிந்து மன்னர்களின் வீரதீரத்திற்கு ராஜா தேசிங்கு ஒரு சிறந்த உதாரணம்.

சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!


சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் போதெல்லாம் பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து வியந்த செஞ்சிக் கோட்டையை நேரில் கண்டபோது எங்கள் கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.
செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின் கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள். நாங்கள் காலை 8.30க்கே சென்றுவிட்டதால் அரைமணிநேர காத்திருப்புக்குப் பிறகே கோட்டைக்குள் நுழைய முடிந்தது.
நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், சிவன் கோயிலும் நம்மை வரவேற்கின்றன. இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் சேதப்படுத்தப் பட்டிருக்கின்றன. இருந்தாலும் அதன் அழகு, இந்தச் சிற்பங்கள் சேதப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மை ஏங்க வைக்கிறது.
தொடர்ந்து நாம் பிரமிப்புடன் நடந்து செல்லும்போது வேலூர் வாயிலும், சாதத்துல்லாகான் மசூதியும் வருகிறது. (இந்த சாதத்துல்லாகான் மசூதி தொல்பொருள் ஆய்வுத்துறையால் வர்ணம் பூசப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.) செஞ்சிக் கோட்டையானது ராஜகிரி கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை, சந்திரகிரி கோட்டை, மேற்குமலைக் கோட்டை என்று பல பிரிவுகளாக உள்ளது. நுழைவுக்
கட்டணம் செலுத்தி ராஜகிரி
கோட்டைக்குள் நுழையும்முன், அதன் வரலாற்றை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ராஜகிரி கோட்டைக்குள் உள்ள செஞ்சியம்மன் கோயிலின் பெயரிலேயே செஞ்சி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
செஞ்சி கி.மு. 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் வசம் இருந்திருக்கிறது. செஞ்சிக்கு அருகே உள்ள சிறுகடம்பூரில் செதுக்கப்பட்டுள்ள 24 சமணத் தீர்த்தங்கர்களின் உருவங்களையும், கிருஷ்ணகிரி மலையில் செதுக்
கப் பட்டுள்ள சமண படுக்கைகளையும் இதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை செஞ்சியை பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரம் மற்றும் மேலைச்சேரியில் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்களும், பணமலை என்ற ஊரில் குன்றின்மேல் உள்ள கோயிலும் இதனை உறுதி செய்கின்றன.
பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், கோனார் பரம்பரையினர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், முஸ்லிம்கள், சத்ரபதி சிவாஜி, மொகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் என எல்லோரும் செஞ்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
இப்போதுள்ள ராஜகிரி கோட்டையை கி.பி. 13-ம் நூற்றாண்டில் கோனார் பரம்பரையில் வந்த ஆனந்தகோனார் என்பவர் கட்டியதாகவும், அவரது மகன் கிருஷ்ணகிரி கோட்டையைக் கட்டியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கி.பி. 14-ம் நூற்றாண்டிலிருந்து 150 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள், செஞ்சிக் கோட்டையை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில்தான் மிக நீண்ட வலிமைமிக்க சுவர்களுடன் கூடிய கோட்டைகளும், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய கோயில்களும் கட்டப்பட்டன.
பாரத வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி கி.பி. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம் களிடமிருந்து செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி தனது உறவினரிடம் ஒப்படைத்தார். பிறகு செஞ்சியின் அரசாட்சி சிவாஜியின் மற்றொரு உறவினரான ராஜாராம் என்பவரிடம் வந்தடைந்தது. இதற்குப் பிறகு கி.பி. 1700-ல் மொகலாய தளபதி ஜூல்பீர்கான் செஞ்சிக் கோட்டையை மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றினார். செஞ்சிக் கோட்டையின் கதாநாயகன் ராஜா தேசிங்கின் தந்தை சொரூப்சிங்கிடம் ஆட்சியை ஒப்படைத்தவர் இவர்தான். சொரூப் சிங்கின் மறைவிற்குப் பிறகு ராஜா தேசிங்கு செஞ்சிக் கோட்டையின் ராஜாவாக முடிசூடிக்கொண்டார்.
செஞ்சிக் கோட்டையில் ஹிந்து மன்னர்கள் கட்டிய கோயில்களையும், சிற்பங்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி இருக்கிறார்கள். முஸ்லிம்களால் சேதப்படுத்தப்பட்டு சிதிலமடைந்துள்ள கோயில்களையும், சிற்பங்களையும் நாம் இன்றும் காணமுடிகிறது.
ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ராஜகிரி கோட்டைக்குள் நுழைந்தால் அதன் தரைதளத்திலும் மலையின்மீதும் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. தரை தளத்திலுள்ள கல்யாண மஹால் தூரத்திலிருந்து பார்க்கும்போதே, பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கிறது. உச்சியில் பிரமிடு வடிவத்துடன் எட்டு அடுக்குகளைக் கொண்ட இந்த மஹாலில் நீச்சல் குளமும் பெண்கள் தங்குவதற்கென தனி அறைகளும் உள்ளன. இந்த மஹாலில் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் 3 சதுரமீட்டர் பரப்பளவுடனும், வளைவான சாளரங்களுடனும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் அறையின் இருபுறங்களில் இறங்குவதற்கும், மேல் அடுக்கிலுள்ள அறைகளுக்குச் செல்வதற்கும் தனித்தனி வழிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அறைகளின் சுவர்களின் உட்பகுதியில் சுடுமண் குழாய்களைப் பொருத்தி அவற்றின் மூலம் நீர் ஊற்றுகள் வருமாறு இந்த கல்யாண மஹால் கட்டப்பட்டுள்ளது.
தரைதளத்திலுள்ள தானியக் களஞ்சியம், வெடிமருந்து கிடங்கு, வேணுகோபால சுவாமி கோயில், சப்த கன்னியர்கள் கோயில், ராஜா தேசிங்கு தகனம் செய்யப்பட்ட இடம், சர்க்கரைக் குளம், செட்டிக் குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக் கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். செங்குத்தான படிக்கட்டுகளின் வழியே ராஜகிரி கோட்டை யின் மேலே ஏறினால் ஆனந்த கோனாரும், நாயக்க மன்னர்களும் கட்டிய கோட்டைகளும், ரங்கநாதர், கமலக்கன்னியம்மன் போன்ற கோயில்களும் நமக்காகக் காத்திருக்கின்றன. மேலே ஏறஏற மலையேற்றம் கடினமாக இருக்கும்படியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இழுவைப் பாலத்தின் மூலம் ராஜகிரி கோட்டையின் உச்சிக்குச் சென்றால் அங்கும் நமக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. மணிக்கூண்டு (இந்த மணிக்கூண்டிலிருந்த வெண்கல மணி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின்போது பாண்டிச்சேரிக்குக் கடத்தப்பட்டது), பீரங்கி, பால ரங்கநாதர் கோயில், தானியக் களஞ்சியம் மற்றும் நீர் வற்றாத சுனைகளும் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
ராஜகிரி கோட்டையின் உச்சியில் இருந்து கிருஷ்ணகிரி கோட்டை, சந்திரகிரி கோட்டை, மேற்கு மலைக் கோட்டை மற்றும் கோட்டை இல்லாத மலைத்தொடர்களின் அழகை ரசிக்க, கண்கள் கோடி வேண்டும். ராஜகிரி கோட்டையில் இருந்து இறங்கி பாண்டிச்சேரி வாயிலின் வழியாக வேங்கடரமணர் ஆலயத்தையும், சுழலும் பீரங்கி மேடையையும் தரிசித்து விட்டு நாங்கள் ராணி கோட்டை என்றழைக் கப்படும் கிருஷ்ணகிரி கோட்டைக்குச் சென்றோம். நாள் முழுவதும் மலை யேறிய களைப்பு இருந்தாலும் ராணி கோட்டையிலுள்ள அழகிய கட்டடங்களையும், சிற்பங்களையும் காணும் ஆவல் எங்களின் களைப்பைப் போக்கியது.
ராணி கோட்டையின் படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தாக உள்ளன. இடையிடையே இளைப் பாறுவதற்கு சிறுசிறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. ராணியைப் பல்லக்கில் தூக்கி வரும்போது பல்லக்குத் தூக்கிகள் இளைப்பாறுவதற்காக இந்தச் சிறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சில உள்ளூர்வாசிகள் நம்மிடம் தெரிவித்தனர். எல்லா கோட்டைகளைப் போலவே இங்கும் எண்ணெய் கிணறு, சுழலும் பீரங்கி மேடை, ரங்கநாதர் கோயில், நெற்களஞ்சியம் ஆகியவை உள்ளன. இருந்தாலும் இங்குள்ள கிருஷ்ணர் கோயிலும் தர்பார் மண்டபமும் அதில் உள்ள ஊஞ்சல் மண்டபமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பியபோது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் பயணம் செய்து திரும்பியது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ராஜா தேசிங்கும், ராஜராஜ சோழனும், சத்ரபதி சிவாஜியும் ஆட்சி செய்த செஞ்சிக் கோட்டை, நம் ஹிந்து மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை செஞ்சிக் கோட்டைக்குச் சென்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள்.

June 11, 2007

இடைவிடாது இறைசேவை!

அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆர்.பாலாஜி என்பவர் தினமும் கரடு முரடான படிக்கட்டுகளின் வழியே ஒரு குடம் தண்ணீரைச் சுமந்து சென்று பசுபதீஸ்வரருக்கும், மரகதாம்பிகைக்கும் பூஜை செய்கிறார். மலைக்கு எதிரே உள்ள கணேஷ் பவன் ஓட்டலில் இருந்து கிடைக்கும் பொங்கலையும் படையலிடுகிறார். கடந்த இரண்டரை வருடங்களாக இவர் இடைவிடாது இப்பணியை ஒரு தவம் போல செய்து வருகிறார்.

பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம்!


அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.
அச்சிறுபாக்கம் கிராமத்து சூழல் மிகவும் அமைதியான கிராமிய மண்ணின் மனத்தோடு, வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது. கிராமத்தினுள் நுழையும்போது ஒரு விநாயகர் கோயிலும், அருகில் பெரிய குளக்கரையும் அதனையடுத்து பஜார் என்று சொல்லப்படும் கடைத்தெருவும் நம்மை வரவேற்கிறது. அதனை அடுத்து ஊருக்குள் நுழைந்தால் ஊரின் மையப்பகுதியில் அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான சிவன் கோயில் அமைந்துள்ளது. அதுதான், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் அர்த்த மண்டபம். அதனை அடுத்து நேராக மூலவர், சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சோழர் காலத்து திருத்தலமாகும்.
அச்சிறுபாக்கம் என்பது பழங்காலத்தில் அச்சு இருபக்கம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது நமது சமய வழக்கப்படி எந்த காரியமானாலும் திருமணம் போன்ற சுப காரியங்களானாலும், தெய்வ காரியங்களானாலும் முழுமுதற் கடவுளான விநாயகரின் திருஉருவத்தை மஞ்சளில் பிடித்து பூஜை செய்த பிறகே ஆரம்பிப்பார்கள். அதனை உணர்த்தும் பாடல்களும் உண்டு, நெடுங்காலத்துக்கு முன்பு கிராமத்து மக்கள் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழாவின் போது விநாயகப் பெருமானை வழிபடாமல் தேர் இழுக்க முற்பட்டபோது தேரின் அச்சுமுறிந்து இருபக்கமும், தேரின் சக்கரங்கள் வீழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதனாலேயே அந்த ஊரின் பெயர் அச்சு இருபக்கம் என்று வழங்கலாயிற்று. `அச்சு இருபக்கம்' என்பதே காலப்போக்கில் அச்சிறுபாக்கம் என்று மாறிற்று என்று கூறப்படுகிறது. அச்சிறுபாக்கம் மலை, கிராமத்தின் வலது புறத்தில் உள்ளது. இம்மலை தரையிலிருந்து சுமார் 700 அடி உயரம் கொண்டது. மலையில் பாறைகளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றால், முதலில் விநாயகரைத் தரிசித்து விட்டு மேலே சென்று பசுபதீஸ்வரரைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் உள்ள கோயிலில் உள்ள சிவாலயம் மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வர வஜ்ரகிரி வடிவேலர் ஆலயம் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகின்றது.
இம்மலை வஜ்ரகிரி என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் தோற்றத்தைப் பார்க்கும்போதே அக்கோயில் பல தாக்குதல்களையும், விஷமச் செயல்களையும் எதிர்கொண்டு நிற்பதை உணர முடியும்.
இக்கோயில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பதை, அதன் அமைப்பே நமக்கு உணர்த்துகிறது. சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முதன்முதலில் கோயில் ஸ்தாபிக்கப்பட்டபோது இருந்த சிவலிங்கம், விஷமிகளின் செயலால் மலைச்சரிவில் புதையுண்டு கிடப்பதை நாம் காணலாம். நெடுங்காலத்துக்குப் பிறகு 1960களில் மௌன சித்தராஜா என்பவர் இத்திருத்தலத்தைப் பராமரித்து வந்திருக்கிறார். கோயிலைப் புனரமைக்கும் முயற்சியில் மீண்டும் சிவலிங்கத்தையும், முருகனின் திருஉருவத்தையும் அமைத்தார். அவர் இருந்த காலத்தில் மக்கள் அங்கு சென்று பிரதோஷ காலங்களிலும், வாரத்தின் முக்கிய பூஜை நாட்களிலும் வழிபட்டு வந்துள்ளனர். மலைகள் சூழ்ந்த அடிவாரத்தில் ஒரு குளத்தை நிர்மாணித்து அதில் இரட்டை சுனைகளை சீரமைத்து கிணறுகள் அமைத்துள்ளார். பல மூலிகைச் செடிகொடிகளை கொண்ட வனாந்திரமான மலையின் பின் அடிவாரத்தில் சப்த கன்னிகளுக்கு கோயில் உள்ளது.
அச்சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான சீதாபுரம், பள்ளிபேட்டை, நேமம் ஆகிய பகுதிமக்களுக்கு பசுபதீஸ்வரர் கோயில் குலதெய்வக் கோயிலாகும். பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அச்சிறுபாக்கம் இந்துக்களின் கோரிக்கைகள்


அச்சிறுபாக்கம் இந்துக்களின் கோரிக்கைகள்
* மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்ல, முன்னோர்களால் அமைக்கப்பட்ட பாதையை சீரமைக்க வேண்டும். இந்தப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் கிறிஸ்தவர்கள் கட்டியுள்ள அலங்கார நுழைவு வாயிலை அகற்றிவிட்டு பசுபதீஸ்வரருக்கு நுழைவு வாயில் கட்ட வேண்டும்.
* பசுபதீஸ்வரருக்குச் சொந்தமான வஜ்ரகிரி மலையை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
* வஜ்ரகிரி மலையில் உள்ள பாறைகளை உடைத்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
* இந்துக்களின் வழிபாட்டு முறையையே பின்பற்றச் செய்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும்.
* பசுபதீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளையும், மின்சார போர்டுகளையும் உடைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வஜ்ரகிரி மலையை நாங்கள் 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று பாதிரிகள் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். இதற்கு வனத்துறையினர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

மலைக்கு வேலி!


வீட்டிற்கோ அல்லது வயல்வெளிகளுக்கோ வேலி அமைப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அச்சிறுபாக்கத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் கட்டியுள்ள மழைமலை மாதா என்ற சர்ச் உள்ள மலை முழுவதையும் ஏதோ தங்கள் குடும்ப சொத்துபோல வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த மலைக்கு கீழ்தான் வனத்துறை அலுவலகமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவர்களின் பிடியில் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை!


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது. இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
மலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் அல்ல, உதிரமே கொட்டும். கீழே இருந்து அல்லது பேருந்தில் செல்லும்போது பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.
அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின் பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.
தரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது ஆட்சீஸ்வரர் கோயில். இந்த ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே மு
ன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.
வஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்' என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர். மலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க' என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது.
பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர்.
எப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும்
ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள்.
அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்.
1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ' என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர். சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம். நீங்கள் எதுவும் செய்யக்கூடாது' என்று தடுத்துவிட்டனர்.
`நாங்கள் எங்கள் கோயிலை சீரமைக்கக் கூடாது என்கிறீர்கள். ஆனால் இதே மலையில் கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமான சர்ச் கட்டியுள்ளனரே? அதை ஏன் தடுக்கவில்லை' என்று சில துடிப்புள்ள இளைஞர்கள் கேட்டபோது, `அவர்கள் மலை
யை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளனர்' என்று வனத்துறையினர் கூறியதாக நம்மிடம் பேசிய சில உள்ளூர் இளைஞர்கள் கூறினார்கள். அதற்கு பிறகு மலையிலிருந்த மின்விளக்குகளையும், `சிவசிவ' மின்சார போர்டையும் இந்து விரோத சக்திகள் உடைத்து நொறுக்கிவிட்டனர். இதுபற்றி மலை உச்சிக்குச் சென்று தினமும் பூஜை செய்துவரும் ஆர்.பாலாஜி என்பவரும், ஊர்ப் பெரியவர்களும், அச்சிறுபாக்கம் காவல்துறையினர் முதல் தமிழக முதல்வரின் தனிபிரிவு வரை புகார் செய்துள்ளனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை.
கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமாக அமைத்துள்ள மழைமலை மாதா அருள்தலம் என்ற சர்ச்சை, வேளாங்கண்ணிபோல் பிரபலப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திருவண்ணாமலையில் நடப்பதுபோல் சர்ச்சை சுற்றி பௌர்ணமி தோறும் கிரிவலத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்துக்கள் தங்கள் கோயிலில் உள்ள வேப்பமரத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி மஞ்சள் கயிறுகளையும், தொட்டிலையும் கட்டுவதுபோல இங்கும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி இந்துக்களின் வழிபாட்டு முறையிலேயே சென்று அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, மதமாற்றி வருகின்றனர். பள்ளிக்கூடங்கள் மற்றும் சில சேவைப்பணிகள் பெயரிலும் அப்பட்டமாக அங்கு மதமாற்றம் நடந்து வருகிறது. ஒருவர் எழுதிய புத்தகத்தைத் தழுவி வேறு ஒருவர் புத்தகம் எழுதினாலோ அல்லது ஒரு திரைப்படத்தின் சாயலில் வேறு ஒரு திரைப்படம் வந்தாலோ அது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது அதற்கு தடையும் விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை அப்படியே பின்பற்றி ஏமாற்றி மதமாற்றுபவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.

கிறிஸ்தவர்கள் அந்த மலைத்தொடரை அபகரிப்பதை பார்த்த முஸ்லிம்கள், தங்கள் பங்கிற்கு மலையின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். பசுபதீஸ்வரர் கோயிலுக்கு பின்பக்கம் சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் உள்ள கன்னிமார் கோயிலுக்கு அருகில் முஸ்லிம்களும் இந்துக்களை போல எட்டு செங்கலை நட்டு குங்குமப் பொட்டிட்டு பிறைகொடியை பறக்கவிட்டு ஒரு பள்ளிவாசலை அமைக்க முயற்சித்துள்ளனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இது முறியடிக்கப்பட்டுள்ளது.
வஜ்ரகிரி மலைத்தொடர் முழுவதும் பசுபதீஸ்வரருக்குச் சொந்தமானது. இப்போது கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டியுள்ள மலைக்குக் கீழே சித்திவிநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வழிபட்டுவிட்டுத்தான் பக்தர்கள் பசு
பதீஸ்வரரை தரிசிக்க வருவார்கள். இப்போது இடையில் சர்ச் வந்து விட்டதால் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்போது 3 கோடி செலவில் ஜெபகோபுரம் ஒன்றைக் கட்டி வருகின்றனர். இதற்காக மலைப் பாறைகளை உடைத்து, அந்த ஜல்லிக் கற்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுத்து வஜ்ரகிரி மலையையும், இந்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. ஓட்டுக்காக சிறுபான்மையினரின் காலில் விழும் தமிழக அரசுக்கு, இந்த அப்பாவி இந்துக்களின் கூக்குரல் கேட்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.